எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவதூறு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகர் எப்போதுதான் கைது செய்யப்படுவார் என கேள்வி தற்போது பொதுமக்களிடையே எழ தொடங்கிவிட்டது.
எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து பதிவு வெளியிட்ட விவகாரத்தில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
2 தனிப்படைகள் அமைத்து இன்னும் அவரை போலீசார் தேடிக் கொண்டே இருக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டும் அவருக்கு முன் ஜாமீன் வழங்காத நிலையிலும், அவர் 50 நாளுக்கு மேல் தலைமறைவாகவே இருக்கிறார்.
அவர் வருகிற 20ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனாலும் சென்னையில் போலீசாரின் உதவியுடன் எஸ்வி.சேகர் உலா வருகிறார் என்று செய்திகள் பரவின.
எஸ்.வி.சேகர் பற்றி சில நாட்களுக்கு முன் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகனின் நிச்சயதார்த்த விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதோடு, தம்பதிகளுடன் அவர் செல்பியும் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது எஸ்.வி.சேகர் எப்போதுதான் கைது செய்யப்படுவார் என கேள்வி பொதுமக்களிடையே ஆழமாக ஒலிக்க தொடங்கிவிட்டது.




