நடிகை நிவேதா பெத்துராஜ் - சட்ட நடவடிக்கை எடுப்பேன்!

நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னைப் பற்றி வதந்தி பரப்பினால் வழக்குப் போடுவேன் என்று மிக ஆவேசமாக கூறியுள்ளார்.

நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்', வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி', எழில் இயக்கத்தில் 'ஜெகஜாலக் கில்லாடி' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதா பெத்துராஜ் நீச்சல் உடையில் ஆபாசமாக போஸ் கொடுப்பது போன்ற படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஒரு நடிகையின் படம் எனது பெயரில் வெளிவந்துள்ளது. அது நான்தான் என்று பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. என் மீது அக்கறை கொண்டவர்கள் இதுகுறித்து எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்த செயல் கவனக்குறைவாக நடந்ததாக தெரியவில்லை. என்பெயரை கெடுக்கும் நோக்கில் யாரோ இந்த சதிசெயலை செய்துள்ளனர். இது என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது.

ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன். ஆயினும் இந்த பிரச்னை தொடருகிறது. தொடர்ந்து இவ்வாறு வதந்தி பரப்பினால் வழக்குப் போடுவேன். இந்த அறிக்கை மூலமாக எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன்.

ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உள்ளது. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு என்று மிக ஆவேசமாக நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.