கமல்ஹாசன் - அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்துக்கு ஆதரவு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்து டெல்லி கவர்னர் அலுவலகத்தில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய 3 மந்திரிகளுடன் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தார்.

டில்லியில் தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரினால் அரசின் அனைத்து செயலர்களும் அமைச்சர்களுடன் ஒத்துழைப்பதில்லை. இதனால் அரசுப் பணிகள் நடப்பதே இல்லை.

இதையெடுத்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்ட அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர். அரசு செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தனர். அதற்கு ஆளுநர் மறுத்து விட்டார்.

அதன் பிறகு ஆளுநர் மாளிகையில் கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். இந்த போராட்டம் திங்கட்கிழமை மாலையில் இருந்து நடைபெறுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆதரவு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது "டுவிட்டர்" பக்கத்தில்..

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது அல்ல. டெல்லியிலும், புதுச்சேரியிலும் நடக்கும் விஷயங்களில் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பான மாற்றத்தை விரும்பும் மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், "நன்றி" கமல் என பதில் அளித்துள்ளார்.