திமுக தேர்தல் அறிக்கை - சிறப்பம்சம் என்ன?

மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.

நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைத்திருக்கும் விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய தொகை வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு, முன்பிருந்தது போல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

பத்தாம் வகுப்பு வரை படித்த 50 லட்சம் கிராமபுர பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

கிராம பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூபாய் 50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.

மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.

மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10-ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்கவரி வசூல் உரிமை முடிந்த பின்னரும் வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சலுகை வழங்கப்படும்.

பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களான மதுரை திருச்சி கோயம்புத்தூர் சேலம் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வலியுறுத்தப்படும் என்று இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.