ஓ.பன்னீர்செல்வம் - அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார்.

இதில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும்.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.

விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்.

ஜாதி சான்றிதலில் மாற்றம் இன்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தப்படும்.

பொது சிவில் சட்டதை அமல்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து வறட்சியின் போது பயன்படுத்த திட்டம் கொண்டுவரப்படும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை பெறும் வண்னம் காலத்திற்கேற்ற பயிற்சி எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம்.

இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.