விராட் கோலி, மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை !

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுக்கும், இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க, மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு வழங்கி கவுரவிக்கும்.

தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் விராட் கோலி இருக்கிறார். மேலும் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். இதுவே அவரது பெயரை பரிந்துரை செய்ய காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு சென்ற ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மற்றும் இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இதுவரை கேல் ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர், மகேந்திர சிங் தோனி.