சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

ஐபிஎல் நேற்று நடைபெற்ற முதல் பிளே-ஆப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நுழைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 139 ரன்களை எடுத்தது. இதனையடுத்து சென்னை அணி 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் இறங்கினர். வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் (டக் அவுட்டாகி) வெளியேற அதிர்ச்சி அளித்தார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் இருந்தே துல்லியமாக பந்து வீசியது. இதனால் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் சென்னை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டுபிளஸ்சிஸ் தனி ஒருவனாக நின்று அரை சதமடித்தார். மற்றவர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். டுபிளஸ்சிஸ் 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நுழைந்தது.