இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன

இன்று இரவு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இது 8 அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் 31 வது லீக் ஆட்டமாகும்

இன்று இரவு 8 மணிக்கு போட்டி துவங்கவுள்ளது.

இதுவரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வி அடைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது.

பெங்களூரு அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் பெங்களூரு அணி இருக்கிறது.

மும்பை அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, இவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். பந்து வீச்சில் மெக்லெனஹான், குணால் பாண்ட்யா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

மும்பை-பெங்களூரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி முயற்சிக்கும்.

இரு அணிகளுக்கும் இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. அதில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.