ராகுல் காந்தி - காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் !

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

வரும் ஏப்ரல் 11 தேதி முதல் மே தேதி 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 54 பக்கங்களை உள்ளடக்கியது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறோம். 5 முக்கிய அம்சங்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் வழங்கும் வகையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின்மூலம் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைக் குடும்பங்கள் பயனடையும்.

பண மதிப்பிழப்பு பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் நியாய் திட்டம் இருக்கும். புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வை எதிர்க்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தமுறை ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என்று இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

தேர்தல் அறிக்கையின் இதில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.

1. ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.

2. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

3. தமிழகம் உள்பட நீட் தோ்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

4. ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படும்.

5. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

6. இலங்கையுடனான மீனவா்களின் பிரச்சினை தீா்க்கப்படும்.

7. அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

8. அரசுத் தோ்வுக்கான கட்டணம், விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

9. விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட், அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

10. விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

11. அரசு துறையில் காலியாக உள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

12. தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டி திட்டம் ரத்து செய்யப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.

13. மத்திய அரசிலுள்ள 22 லட்ச காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

14. அரசுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் நீக்கப்படும்.

15. புதிதாக தொழில் தொடங்குபவா்கள் 3 ஆண்டுகள் உரிமம் பெறத் தேவையில்லை.