நடிகர் சித்தார்த் - எச்.ராஜாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை நீதிமன்றமும், போலீசாரும் இதை ஏன் இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை, மெய்யபுரத்தில் விநாயர் ஊர்வலம் குறிப்பிட்ட வழியில் செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல் துறையினர் எச்.ராஜாவிடம் கூறினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீஸாரை விமர்சித்ததோடு, உயர் நீதிமன்றத்தையும் சில மோசமான வார்த்தைகளால் திட்டினார் எச். ராஜா.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

எச்,ராஜாவின் கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து எச்.ராஜா மீது புதுக்கோட்டை போலீசார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், எச்.ராஜாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, எச்.ராஜாவை இடியட் என்றும், இந்துத்துவா பயங்கரவாதி என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், போராட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறையினர், உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய எச்.ராஜாவை வேடிக்கை பார்க்கின்றனர்.

நீதிமன்றம், போலீஸ், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் குறித்து விமர்சித்து வரும் எச்.ராஜாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதில் சித்தார்த் தெரிவித்துள்ளார்.