நடிகர் விக்ரம் நடித்துள்ள - மூன்றாவது கண் சிசிடிவிக்கான குறும்படம் !!

நடிகர் விக்ரம் நடித்துள்ள சிசிடிவிக்கான விழிப்புணர்வு குறும்படம் மூன்றாவது கண் (தேர்ட் ஐ) சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார்.

சென்னை மாநகர் முழுவதும் சி.சி.டிவி கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் இந்த குறும்படத்தில் பேசியுள்ளார்.

சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்தக் குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. குறும்படத்தை ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட, நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார். ஜேடி-ஜெர்ரி இந்த குறும்படத்தை இயக்கியுள்ளனர்.

நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசுகையில்:-

சிங்கப்பூரை போல் பெண்கள் பயமின்றி நடமாடும் நிலைமை விரைவில் சென்னையிலும் வரும். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம் என்றார்.

மேலும் அனைவரும் தங்களது வீடுகளில், தெருக்களில் சி.சி.டிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என்று நடிகர் விக்ரம் கேட்டுக் கொண்டார்.