சுப்ரீம்கோர்ட் அதிரடி - ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதால், தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இருடுகளில் இரட்டை குடியுரிமை இருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில் இங்கிலாந்து நாட்டில் நிறுவனங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் பேக்காப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் அமேதியிலும், வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார்.

எனவே ராகுல் காந்தியின் அமேதி மற்றும் வயநாட்டில் தாக்கல் செய்த 2 வேட்பு மனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமான கூறியுள்ளது.

ராகுல் காந்தி இந்தியர் தான். அவர் இந்தியர் இல்லை எனக் கூறுவதற்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் வழக்க தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.