எச்.ராஜா முறையீடு - நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது

உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என எச்.ராஜா தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் தகாத வார்த்தைகளால் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எச்.ராஜாவுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

அதேநேரத்தில் நீதிபதிகள் சி.டி செல்வம், நிர்மல் குமார் அமர்வு எச்.ராஜா நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வழக்கை தானாக வந்து விசாரிக்க முன்வந்தது. மேலும் 4 வாரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இல்லை என எச்.ராஜா தரப்பில் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானியிடம் முறையிடப்பட்டது.

ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் சி.டி செல்வம் அமர்வு தன்னை விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், தலைமை நீதிபதிதான் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரமுடியும் என எச்.ராஜா முறையீடு செய்துள்ளார்.