சபாநாயகர் தனபால் நீக்குவது தொடர்பாக சட்டப்பேரவை செயலருக்கு எம்.எல்.ஏ கருணாஸ் மனு

சபாநாயகர் தனபாலை நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளருக்கு எம்.எல்.ஏ கருணாஸ் தரப்பு மனு அளித்து உள்ளனர்.

முதல்வரை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு எம்.எல்.ஏ கருணாஸ் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தரப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார். அவரது வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், சபாநாயகரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இதற்காக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.