எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் 20 ஆயிரம் ரூபாய்க்கு பணம் மேல் எடுக்க முடியாது

இனி ஒரு நாளைக்கு பாரத ஸ்டேட் வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது. இந்த கட்டுப்பாடு இம்மாதம் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையிலும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தற்போது எடுக்க முடியும்.

இனி அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. இந்த புதிய உத்தரவு இம்மாதம் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளைகளிலும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.