இந்திய அணி - 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் வரலாற்று சாதனை படைத்தது !

இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது முடிந்தது.

இந்திய அணி அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது, 2-வது டெஸ்ட் போட்டியில் பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது.

4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி ‘பாலோ–ஆன்’ ஆனது.

31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு இருள் சூழ்ந்ததால், போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி போட்டியை நடுவர் நிறுத்தினார். அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

இன்று கடைசி நாளான காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் ஆட்டம் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தது.

இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.

72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெயரையும் இந்தியா பெற்றுள்ளது.