சென்னை வானிலை ஆய்வு மையம் - தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் !

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது.

நேற்றிரவு முதல் தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழை பொழிந்து வரும் நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னையில் மிதமான மழை இருந்தாலும், ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

எனவே மீனவர்கள் தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

தெற்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்பு இல்லை என இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறினார்.