சோனியா காந்தி - அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உயிரிழந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே கலைஞருக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கப்பட்டது. கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த சிலையின் திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைத்தார். சிலையை திறந்துவைத்த பின்னர் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அவர்களுடன் தலைவர்களும் சென்றனர்.

இந்நிகழ்வினை தொடர்ந்து சென்னை YMCA விளையாட்டுத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தில் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டையில் பொதுக் கூட்ட வளாகம், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.