வைரமுத்து - சின்மயி என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்

என் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்றால், பாடகி சின்மயி என் மீது வழக்கு போடுங்கள். அதை சந்திக்க தயார் என்று வீடியோ மூலம் வைரமுத்து பதிலளித்திருக்கிறார்.

மீ டூ எனும் ஹேஷ்டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயியும் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

சின்மயி உடனே, வைரமுத்து ஒரு பொய்யர் என்று பதில் அளித்து இருந்தார்.

இந்நிலையில் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள வீடியோவில்:-

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். பாலியல் புகார் தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.

நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை யாரும் இப்போது முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலைவணங்குகிறேன் என்று வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.