ஜிசாட் - 7A செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

இன்று மாலை 4.10 மணிக்கு ஜிசாட்- 7A வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’ - F11 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7A என்ற செயற்கைகோளை வடிவமைத்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- F11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தியது.

இது இந்திய எல்லை பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது, விமான பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான ஜிசாட்- 7ஏ தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக வடிவமைத்துள்ளது இஸ்ரோ. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளானது இந்தியாவின் 35-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும்.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது.

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜினிக் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படுகிறது. ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ- பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயற்கைகோள் முழுவதும் கியூ-பேண்ட் பயனாளர்களின் தொலைதொடர்புக்கு உதவும். மேலும் இது இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் ரேடார் நிலையங்கள், விமான தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.