மத்திய அரசு - அனைத்து கம்ப்யூட்டர், செல்போன்களையும் கண்காணிக்கப்படும்

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்கும் அதிகாரத்தை சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

நேற்றுதான் இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது. மொத்தம் 10 அமைப்புகள், நிறுவனங்கள் இதற்கான அனுமதியை பெற்று இருக்கிறது.

இதன் மூலம் இந்த அமைப்புகள் எல்லாம் நம்முடைய அனுமதி இல்லாமலே நம்முடைய கணினி மற்றும் போன்களை கண்காணிக்க முடியும்.

சிபிஐ, உளவுத்துறை, அமலாக்க துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தேசிய புலனாய்வு அமைப்பு, ரா, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி கமிஷ்னர் அலுவலகம் ஆகியவை இந்த 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கி உள்ளது.

தேசிய பாதுகாப்பு கருதி இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. உலக நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கவும், தீவிரவாத செயல்களை முறியடிக்கவும், வழக்குகளை, விசாரணையை விரைவாக முடிக்கவும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டில் இயற்றப்பட்ட தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த அதிகாரம் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கம்ப்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு ஏன் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்டுபிடிக்கவே இந்த அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்கான 10 அமைப்புகளும் தங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. அதைத்தான் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

சாதாரண மக்களுக்கு இந்த உத்தரவால் எந்த இடையூறும் ஏற்படப்போவதில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளவர்களின் கம்ப்யூட்டர்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். எனவே இதுபற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இவ்வாறு அவர் கூறினார்.

தனி நபர்களின் கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டதற்கு, இதற்க்கு பல கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இனிமேல் நம்முடைய போன், கணினிகளை நம்முடைய அனுமதி இல்லாமல் கண்காணிக்க முடியும்.