மு.க.ஸ்டாலின் - திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடம், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கருத்து கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று மனு அளித்தார்.

கஜா புயல் பாதிப்பு என்பது அந்த பகுதியில் அதிகமாக இருப்பதால், தற்போது தேர்தலை நடத்துவது சிரமமான ஒரு விஷயமாக உள்ளது என்பதை வலியுறுத்தியிருந்தார் டி.ராஜா.

திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், திருவாரூர் தேர்தல் தொடர்பாக கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.