ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 2.0 படத்தின் டிரைலர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படம் டிரெய்லர் இன்று சத்யம் தியேட்டரில் பிரமாண்டமாக வெளியானது.

2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எந்திரன். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிரத்யேகமாகப் படத்தின் பாடல்கள் 3டி-யில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

2.0 படத்தின் அனைத்து பெருமைகளும் இயக்குனர் சங்கரையே சேரும். 2.0 படம் மூலம் உலகிற்கே ஒரு நல்ல தகவலை கூறியுள்ளோம். உடல்நிலை சரியில்லாதபோது, 2.0 படத்திலிருந்து விலக நினைத்தேன், ஆனால் ஷங்கர் விடவில்லை.

படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என தயாரிப்பாளர் தெரிவித்தார். இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார்.

படம் லேட்டா வருவதாக கூறினார்கள், லேட்டா வந்தாலும் சரியான நேரத்திற்கு வரவேண்டும். வந்து சரியா அடிக்க வேண்டும், நான் படத்தை சொன்னேன் . தற்போது படம் வந்தாச்சு, வெற்றியும் உறுதியாயிடுச்சு, இனிமே ஹிட் அடிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.