5.91 கோடி வாக்காளர்கள் - தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னையில் வெளியிட்டார்.

வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இன்று சென்னையில் வெளியிட்டார்.

சத்யபிரத சாஹூ கூறுகையில்:-

தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.91 கோடி ஆகும்.

ஆண் வாக்காளர்கள் - 2,92,56,960

பெண் வாக்காளர்கள் - 2,98,60,765

மூன்றாம் பாலினத்தவர்கள் - 5,472 பேர் உள்ளனர்

இதில் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டம் சென்னை ஆகும். இங்கு 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர். இங்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் குறைந்த அளவில் வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக அரியலூர் அறியப்படுகிறது. இங்கு 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர். அது போல் துறைமுகம் தொகுதியில் 1,66,511 வாக்காளர்கள் உள்ளனர்.

இளைய வாக்காளர்கள் அதாவது 18 வயது முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்களை கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம் ஆகும். இங்கு இளைய வாக்காளர்கள் 7696 பேர் உள்ளனர். வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 97 பேரின் பெயரும் பட்டியலில் உள்ளது.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலே வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.

எனவே இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் அளித்தால், அது தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் துணை வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.