நீதிபதிகள் எச்சரிக்கை - தமிழகத்தில் நீதித்துறை நெருக்கடியில் உள்ளதாக அறிவிக்க நேரிடும்

தமிழக அரசு சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை கையாளும் விதத்தை பார்க்கும்போது, தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் அதையடுத்து சிறப்பு அதிகாரியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கும் இடையேயான பிரச்சனை உச்சம் அடைந்து வருகிறது. சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது போலீசார், அரசு அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அடுக்கடுக்காக புகார் அளித்து வருகிறார்கள்.

சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கடந்த ஒரு வருடமாக விசாரித்து வருகிறது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் தரப்பில் இருந்து தனக்கு அலுவலகம் இன்னும் முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் இல்லாமல் நடுத் தெருவில் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. அதில் சிலை கடத்தல் வழக்கு தொடுக்கப்பட்டதில் இருந்தே அரசின் செயல்பாடு சரியாக இல்லை இப்படியே போனால் நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும்.

பொன்.மாணிக்கவேலுக்கு ஏன் இன்னும் அலுவலகம் ஒதுக்கவில்லை. 50 நாட்களாகியும் இன்னும் அலுவலகம் அமைக்கப்படவில்லை.

இதற்கு ஓய்வு பெற்ற ஒருவர் காவல்துறை கீழ் உள்ள அதிகாரிகளை எப்படி இடமாற்றம் செய்ய முடியும் என நீதிபதிகளிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும்போது சிறப்பு அதிகாரி ஏன் தொடரக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

சிலைகடத்தலை தமிழக அரசு சரியாக கையாளவில்லை. இதை பார்க்கும் போது நீதியும், நீதித்துறையும் நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க தோன்றுகிறது என்று நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.